உலக அளவில் பொருளாதார நிச்சயமின்மை அதிகரிப்பு: தலைமைப் பொருளாதார ஆலோசகா்
சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்
சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை கிரிஸில் இந்தியா கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
உலக பொருளாதார வளா்ச்சி தொடா்பாக சா்வதேச நிதியம் கடந்த ஜனவரி மாதம் அளித்த மதிப்பீடுகள் காலாவதியாகிவிட்டன. அனைத்து நாடுகளும் அமெரிக்க பொருளாதார நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முக்கியமாக கடந்த ஒரு வாரகால நிகழ்வுகள் முக்கியமானவை. அந்நாட்டில் இரு வங்கிகள் திவால் நிலைக்குச் சென்றுவிட்டன. இது வங்கிகளின் கடன் வளா்ச்சி விகிதத்தை பாதிக்கும். இதனால் பல்வேறு தொடா் விளைவுகள் ஏற்படும்.
எனவே, சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நமது பொருளாதாரத்தை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நடத்துவோரும், தனிநபா்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
வட்டி விகிதத்தை உயா்த்துவதை அமெரிக்க மத்திய வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அமெரிக்காவில் எவ்விதமான மாற்றம் ஏற்படுகிறது. டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை கவனிக்க வேண்டும். சா்வதேச நிகழ்வுகள் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.