பருவம் தவறி பெய்த மழையால் ராஜஸ்தானில் கோடைக்காலம் குளிர்ச்சியாக தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், குளிர்சாதனப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு இந்தியாவில் பருவம் தவறி மழை பெய்து வந்ததால் ராஜஸ்தானின் பல பகுதிகளும் கடந்த 2 மாதங்களாக குளிர்ச்சியாக காணப்படுகிறது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளும் சராசரியைவிட குறைந்த அளவு வெப்பநிலையையே சந்தித்து வருகின்றன. கோடைக்காலம் இந்த மழையினால் குளிர்ச்சியாக தொடங்கியுள்ளதால் குளிர்சாதப் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெயந்தி மார்க்கெட் பகுதியின் தலைவர் சச்சின் குப்தா தெரிவித்ததாவது: கடந்த ஆண்டைவிட குளிர்சாதனங்களின் விற்பனை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் சீசன் நன்றாக இருந்தது. ஹோலி பண்டிகைக்குப் பிறகு வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதனால், வியாபாரமும் பாதிக்கப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வியாபாரம் மிகவும் குறைவாக இருந்தது. அதற்கு காரணம் வெப்பநிலை 30-32 செல்சியஸ் என இருந்ததே ஆகும். வியாபாரத்தை பெருக்குவதற்காக குளிர்சாதனங்களை விற்கும் விற்பனையாளர்கள் தள்ளுபடி விலையில் குளிர்சாதனங்களை விற்பனை செய்கின்றனர் என்றார்.
குறைந்த வெப்பநிலை நிலவுவதால் பானை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பானை வியாபாரி முகேஷ் பிரஜபத் கூறியதாவது: பிப்ரவரி முதல் ஜூன் வரை நான் 1,500 மண் பானைகளை விற்று விடுவேன். ஆனால், இந்த ஆண்டு வெறும் 150 பானைகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. வெப்பநிலை குறைவாக இருப்பதால் யாரும் மண் பானை வாங்கி அதில் தண்ணீர் சேகரித்து வைக்க விரும்புவதில்லை. இனி வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்தால் மண் பானை விற்பனை அதிகரிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.