டாப் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்: மோடி வாக்குறுதி
பாஜக 3வது முறையாக ஆட்சி அமைத்தால், உலகில் மிக உயர்ந்த பொருளாதாரம் கொண்ட 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
பாஜக 3வது முறையாக ஆட்சி அமைத்தால், உலகில் மிக உயர்ந்த பொருளாதாரம் கொண்ட 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நவ. 17ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தாமோஹ் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் இன்று (நவ. 8) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கு எதிராக பாஜக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். ஆனால், அம்மாநில முதல்வர்கள் கருப்புப் பண உற்பத்தியில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
பாஜக ஆட்சி அமைத்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் 10வது இடத்திலிருந்து பிரிட்டனுக்கு அடுத்தபடியாக 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து நாட்டினர் 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டனர். தற்போது அவர்களே இந்தியாவைக் கண்டு வியப்படைகின்றனர். அனைவரின் பார்வையும் இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களில் 85 சதவீத கமிஷன் முறை மட்டுமே செயல்படும். ஏழை மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவசப் பொருள்கள் வழங்குவது குறித்த எனது வாக்குறுதி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அந்த பாவத்தை அவர்கள் செய்யட்டும். மக்களுக்கான எனது சேவைகள் தொடரும் எனக் குறிப்பிட்டார்.