தில்லியில் பாஜகவால் வெல்ல முடியாது என்பது தெரிந்து சதிச்செயலில் பாஜக இறங்குகிறது என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக பேசிய அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் ஆம் ஆத்மிக்கு எதிராக பெரிய சதித்திட்டங்கள் தீட்டப்படுவது இயல்பானது. தில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதை பாஜகவும் பிரதமர் மோடியும் உணர்ந்துவிட்டனர்.
அதனால், எங்களுக்கு எதிராக சதிச்செயலில் இறங்குகின்றனர். மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக பாஜக கூறுகிறது. ஆனால், உண்மையான மதுபான ஊழல் குஜராத்தில் நடந்துள்ளது. அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்துள்ளனர்.
போலி குற்றச்சாட்டுகள் மூலம் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின், விஜய் நாயர் போன்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் என்னையும் கைது செய்ய துடிக்கின்றனர்.
தில்லியில் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது பாஜக. ஏனெனில் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் என்னை சிறையில் அடைத்தாலும், சிறையிலிருந்தபடி ஆம் ஆத்மி வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.