பாஜக வெற்றிபெறும் அதேசமயத்தில் காங்கிரஸ் ஒவ்வொரு மூலையிலும் தோற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியது,
கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் திருப்திப்படுத்தல் மற்றும் ஊழல் கொள்கையுடன் செயல்பட்டுள்ளது. ராஜஸ்தானில் யாருடைய நிலைமை மோசமாக உள்ளது என்றால் அது பெண்கள், தலித்துகளின் நிலைதான். இதனால் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
வாக்கு வங்கி அரசியலால் கலவரக்காரர்கள் மீது ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசோக் கெலாட்டுக்கு சொந்தமாக எந்த உத்தரவாதமும் இல்லை.
சிவப்பு டைரி குறித்து ராஜஸ்தான் முதல்வரிடம் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கு பதிலளிக்க காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது?
மோடி அரசு ஓபிசி(இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு) அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மூலையிலும் காங்கிரஸ் தோற்று வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ராஜஸ்தானில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.