புது தில்லி: மணிப்பூரில் ஆயுதமேந்தி போராடிவந்த ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்.), மத்திய அரசு, மணிப்பூர் மாநில அரசுடன் தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமிட்டது.
ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். "நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்' என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:
மணிப்பூரி ஆயுதக் குழு வன்முறையைக் கைவிட்டு, தேசிய நீரோட்டத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும். மணிப்பூரின் ஆயுதக் குழுவான யு.என்.எல்.எஃப்., மத்திய அரசு, மணிப்பூர் மாநில அரசுடன் தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசின் மூத்த அதிகாரிகளும், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த உடன்படிக்கையின் மூலம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவிய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "எக்ஸ்' தளத்தில், "பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு மைல்கல் சாதனையாகும்.
ஜனநாயக செயல்முறைகளுக்கு திரும்புவதும் வளர்ச்சிப்பாதைக்கான பயணத்தில் யு.என்.எல்.எஃப். அமைப்பு வருவதும் வரவேற்கத்தக்கது' எனத் தெரிவித்துள்ளார்.
இதை காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.