முகப்பு
இந்தியா

அடடா! படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் புகைப்படங்கள் வெளியீடு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டியின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

Updated On : 4 அக்டோபர் 2023, 4:33 pm IST
பகிர்:

புது தில்லி: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை, வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், தனது எக்ஸ் பக்கத்தில், வந்தே பாரத் படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. 2024ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளிவரும் என்ற பதிவுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள், மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கூர்மையான பகுதிகள் எதுவுமின்றி, மேல் படுக்கைகளுக்கு ஏறிச் செல்ல சிறப்பான ஏணிகளைக் கொண்டிருக்கிறது சாதாரண படுக்கை வசதிகொண்ட பெட்டிகள்.

ஆனால், அதுவே ஏசி வசதிகொண்ட ரயில் பெட்டிகளில் பயணிகள் ஏறிச் செல்ல தனியே படிகட்டுகளே வடிவமைக்கப்பட்டுள்ளன.

வரும் 2024ஆம் ஆண்டு படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரமாகத் தொடங்கவிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியின் மாதிரி தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள்: குஜராத்தில் அதிகரிக்கும் வறுமை

இந்த ரயில் பெட்டி, அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டிக்குள் போதுமான இடைவெளி, மேல் படுக்கைக்குச் செல்வதற்கு வசதியான ஏணிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வந்தேபாரத் படுக்கை வசதிகொண்ட முதல் ரயிலின் மாதிரியில் 857 படுக்கை வசதிகளுடன் இருக்கின்றன. அவற்றில் 823 படுக்கை வசதிகள் பயணிகளுக்கானது. மற்றவை ஊழியர்களுக்கானது. ஒவ்வொரு ரயில் பெட்டியும் நான்குக்கு பதிலாக மூன்று கழிப்பறைகள் மற்றும் ஒரு சிறிய உணவகத்துடன் இருக்கும்.

தற்போது, இதுபோன்ற 10 ரயில் பெட்டிகளை சென்னை  ஐசிஎஃப் தொழிற்சாலைக்காக, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஇஎம்எல் தயாரித்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் இருக்கை வசதியுடன் 33 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தயாரிப்புப் பணிகள் முடிந்ததும், 75 இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

இந்திய ரயில்வே, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ஒரு தாழ்தள ஏறும் வசதி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வசதி விரைவில் வந்தே பாரத் ரயிலிலும் ஏற்படுத்தப்படும். பிறகு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சக்கர நாற்காலி உதவி தேவைப்படின் அதனை பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதன் மூலம்  ரயில் நிலையங்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணி எந்த ரயில் நிலையத்தில் ஏறவிருக்கிறாரோ அந்த ரயில் நிலையத்தில் தாழ்தள ஏறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.