ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வருகிற நவம்பர் இரண்டாம் வாரம் - டிசம்பர் முதல் வாரத்துக்கு இடையே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநிலத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.
அதன்படி, இன்னும் ஒரு சில நாள்களில் அதாவது அக்டோபர் 8 முதல் 10 ஆம் தேதிக்குள் 5 மாநிலத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
அதுபோல, 5 மாநிலங்களுக்கும் நவம்பர் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
கடந்த 2018ல் நடந்தது போலவே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
மிசோரம் மாநில சட்டப்பேரவைக் காலம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதியும் மற்ற 4 மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்திலும் முடிவடைகிறது.
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன.
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இந்த 5 மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர்போல் பேசுவதா? - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்