சொத்துகளை அபகரிக்க வேண்டாம்: மக்களுக்கு மணிப்பூர் அரசு
வன்முறை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் சொத்துகளை யாரும் அபகரிக்க வேண்டாம் என்று மக்களுக்கு மணிப்பூர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குவகாத்தி: தங்களது வாழ்விடங்களிலிருந்து வன்முறை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை யாரும் அபகரிக்க வேண்டாம் என்று மக்களுக்கு மணிப்பூர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தை மாநில அரசு மிகத் தீவிரமாக அணுகுகிறது. இதுபோன்ற ஏதேனும் நடவடிக்கைகள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்குமானால், கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் மாநில உள்துறை அமைச்சகம், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி அறிவுறுத்தியிருக்கிறது.
மணிப்பூரில் வன்முறையின்போது வீடுகள் அல்லது நிலப்பரப்புகள் எரித்து அல்லது சேதப்படுத்தப்பட்டதால், அங்கிருந்து புலம்பெயர்ந்தவர்களின் வீடு உள்ளிட்ட சொத்துகளை மற்றவர்கள் அபகரிப்பதிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
Advertisement
ஒருவேளை, அதுபோன்ற அபகரிப்புகள் ஏதேனும் நடந்திருந்தால், உடனடியாக அவற்றை அகற்றுமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை அமைசச்கம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அவ்வாறு யாரேனும் அபகரிப்பில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.