சர்ச்சையான வங்கி விளம்பரம்!
தனியார் வங்கி ஒன்றின் விளம்பரம், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
விளம்பரங்கள் எந்தளவுக்கு ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், விவாதத்திற்கும் காரணமாக அமைகின்றன.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சியின் நாளிதழ் விளம்பரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
‘விழிப்புணர்வு அணியில் இணையுங்கள். எதிர்த்து சண்டையிடுங்கள்’ என்கிற வாசகம் தாங்கிய விளம்பரத்தில் நடித்துள்ள பெண்ணின், நெற்றியில் நிறுத்தக் குறியிடப்பட்டிருந்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தக்குறியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வங்கியின் பயனர்கள் எதிர்கொள்ளும் பண மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
``பண மோசடி செய்பவர்கள் புதிய எதிரிகள், அவர்கள் இன்னும் பெரிதாகவும் சூழ்ச்சியோடும் மாறி வருகிறார்கள். மோசடி குறித்த தகவல்களை உங்கள் கைக்கு அருகில் கொண்டு வரவே `மோசடிக்கு உள்ளாகாதீர்கள்’ முன்னெடுப்பு” என்கிற வாசகங்கள் இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க: ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பள்ளிக் கட்டணம் இவ்வளவா?
ஆனால், விளம்பர நடிகையின் நெற்றிப்பொட்டு இந்து மதத்தின் கலாச்சாரத்தை அவமதிப்பதாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைத்தளப் பயனர்களில் சிலர், இந்த வங்கியைப் புறக்கணிக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்
இந்த விளம்பரத்தில் அனுராதா மேனன் மாடலாக நடித்துள்ளார். தனியார் வங்கி சார்பில் சர்ச்சை குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
மேலும், சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியின் போது தனியார் செயலி ஒன்று `பாகிஸ்தான் ரசிகர்களுக்குத் திறந்த மடல்’ என்கிற பெயரில் வெளியிட்ட விளம்பரமும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.