இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதன் நோக்கம் என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் ஜி20 மாநாடு விருந்தினர் அழைப்பிதழில் இந்தியா என்பதற்குப் பதிலாக 'பாரதம்' (பாரத குடியரசுத் தலைவர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்ததால்தான் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக கூறி வருகின்றன.
இதையும் படிக்க | செப்.13ல் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!
இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் விதி, "இந்தியா என்பது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஐஐடி, ஐஐஎம்.. என இவை அனைத்திலும் இந்தியா இருக்கிறது.
'பாரதம்' என்று மத்திய அரசு மாற்றுவதன் நோக்கம் என்ன? அதன் உள்நோக்கம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று கூடி 'இந்தியா' என்ற பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாஜக கொந்தளித்து தற்போது இந்தியாவுக்கு பதிலாக 'பாரதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. 'பாரதம்' என்பதற்கும் எதிர்க்கட்சிகள் ஒரு விரிவாக்கத்தை(abbreviation) உருவாக்கினால் பாஜக என்ன செய்யும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியின் பெயரை பாரதம் என மாற்றினால்...? - பாஜக அரசுக்கு கேஜரிவால் கேள்வி