புதுதில்லி: நிபா வைரஸ் கரோனா விட ஆபத்தானது, கரோனாவை விட நிபா வைரஸால் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) எச்சரித்துள்ளது.
கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளில் கேரளம் மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 17 பேர் இறந்துள்ளனர்.
கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் 30 முதல் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர். இறந்த மூவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.
இதையும் படிக்க | மகளிா் உரிமைத் தொகையை கபளீகரம் செய்த வங்கிகள்: ரூ.1,000 பறிபோனதால் தவித்த பயனாளிகள்
நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நிபா வைரஸ் கரோனாவை விட ஆபத்தானது. கரோனாவை விட நிபா வைரஸ் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2-3 சதவிகிதம் பேர் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 40-70 சதவிதம் பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர்.
மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ராஜீவ் பாஹல் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் கரோனா நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். கரோனா தொற்று பாதிப்பு இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரையில்தான் இருந்தது. ஆனால், நிபாவால் பாதிப்பு இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது என்றார்.
நிபா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்தே அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் இந்த தொற்று பரவியுள்ளது.
தற்போது நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தென் மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும், கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எப்படி தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது தெரியவில்லை. இது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளம் மாநிலம், கோழிக்கோடு பகுதியில் பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம் என்பதைக் கண்டறிந்தோம். வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் அதனை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இந்த தொற்று பாதிப்பு எப்பொழுதும் மழைக்காலத்தில் தான் நடக்கிறது.
மேலும், கரோனா தொற்று பாதிப்பின்போது நாம் கடைபிடித்து வந்த கைகழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருத்தல் போன்வற்றை கடைபிடித்து வந்தால் தொற்று பாதிப்பையும், தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என ராஜீவ் பாஹல் தெரிவித்தார்.