ஒரு மாதத்துக்கு முன்பு.. கிலோ ரூ.200; இன்றோ ரூ.2: வருத்தத்தில் விவசாயிகள்
ஒரு கிலோ தக்காளியை ரூ.200க்கு வாங்கிச் சென்ற நிலையில், அது தற்போது ரூ.2 - 5க்கு விற்பனைசெய்யப்படுவதால், கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.
மொத்த விற்பனை வியாபாரிகள், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளியை ரூ.200க்கு வாங்கிச் சென்ற நிலையில், அது தற்போது ரூ.2 - 5க்கு விற்பனைசெய்யப்படுவதால், கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.
தக்காளி விலை கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியபோதே, ஏராளமான விவசாயிகள் தக்காளியை பயிரிடத் தொடங்கியதில், இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தக்காளி மற்றும் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது ஒன்றே இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு என்கிறார்கள் விவசாயிகள்.
தங்களது முதலீட்டில் பாதியைக் கூட எடுக்க முடியாத விவசாயிகள் சிலர் மட்டுமே, மனதைத் திடப்படுத்திக்கொண்டு தக்காளியை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். பலரும், அதனை விளைநிலங்களுக்கு அருகே வீசிச் செல்வதும் வாடிக்கையாகியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை உச்சத்தை தொட்டிருந்தது. கிலோ ரூ.200 வரை சில இடங்களில் விற்பனையானது.
இதையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு தமிழக அரசு சாா்பில் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை அதிகரித்ததால் பல்வேறு இடங்களில் தற்போது தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்து வருகிறது.
அதன்படி, திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனா். தற்போது, தக்காளி விலை குறைந்து ரூ.10க்கும் கீழ் விற்பனையாவதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.
நாசிக்கில் 20 கிலோ தக்காளி ரூ.2000க்கு விற்பனையாகி வந்த நிலை மாறி தற்போது வெறும் ரூ.90க்கு விற்கப்படுகிறது. கோல்ஹாபூரில் ஒரு கிலோ ரூ.2 - 3 வரை மட்டுமே விற்பனையாகிறது.