திருவனந்தபுரம்: கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல இடங்களில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், குறிப்பிட்ட வானிலை எச்சரிக்கை எதுவும் இல்லாத திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.