வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட், வடக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்தில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என கணித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வடமேற்கு மாநிலங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், உத்தரகண்ட் மாநிலத்தில் வியாழன் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
இன்று முதல் புதன்கிழமை வரை உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்யக்கூடும். அதேநேரத்தில் இமாசலில் இன்று கனமழை பெய்யும். கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் திங்கள் முதல் புதன் வரை கனமழையும், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை வரை கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த வாரத்தில் மழை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் இன்றும், நாளையும் கனமழையும், பிகார், ஜார்க்கண்டில் அக.9 வரை கனமழையும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.