முகப்பு
தமிழ்நாடு

5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அறநிலையத்துறை சார்ந்த திமுக தேர்தல் வாக்குறுதிகள்!

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது...

Updated On : 29 மார்ச், 2026 at 3:21 PM
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். - கோப்புப் படம்
பகிர்:

5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்துவதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 நடக்கவுள்ளதைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியான நிலையில் அறநிலையத்துறை சார்ந்த அறிவிப்புகள் ‘திருக்கோவில் திருப்பணிகள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.

அவை,

1. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யப்படும்.

2. திருக்கோவில்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 10 கோடி, ரூபாய் 25 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

3. தற்போது 770 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம், மேலும் 50 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

4. ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

5. பழமை வாய்ந்த திருக்கோவில்கள் கண்டறியப்பட்டு ஆண்டுதோறும் ரூ.100 கோடி

செலவில் திருக்கோவில்கள் தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்கப்படும்.

6. தற்போது 14 திருக்கோவில்களில் நடைபெற்று வரும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் நாட்களில் மேலும் 10 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

7. இடவசதி உள்ள பெரிய திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான முறையில் மன ஒருமைப்பாட்டுடன் வழிபாடு செய்ய தியான மண்டபங்கள் அமைக்கப்படும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

8. பக்தர்கள் அதிகளவு கூடும் திருக்கோயில்களில் போதுமான சுகாதார வசதிகள், ஓய்வறைகள், குடிநீர் மற்றும் தரமான உணவு தடையின்றி கிடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படும்.

9. கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் எளிதில் தரிசனம் செய்ய ‘தனி வரிசை’ (Priority Queue) வசதி ஏற்படுத்தப்படும்.

10. அனைத்துத் திருக்கோயில்களிலும் முறையான கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

11. அனைத்துத் திருக்கோயில் திருக்குளங்களிலும் தூர்வாரி நீர் சேகரிப்பு அளவு உயர்த்தப்படும்.

12. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 2800-க்கும் மேற்பட்ட இளைய தம்பதிகளுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மேலும், கூடுதல் நிதியுடன் 5000 திருமணங்கள் இத்திட்டத்தின்கீழ் நடத்தப்படும்.

13. அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் திருக்கோயில்களில் தேவையின் அடிப்படையில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

summary

Consecration Ceremonies for 5,000 Temples: DMK Election Promises Pertaining to the HR&CE Department

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.