முகப்பு
இந்தியா

பாதுகாப்பு வளையத்தில் நாடாளுமன்றம்! மக்களவை ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்ததையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
பகிர்:

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்ததையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர். 

‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கூடியது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இந்த சம்பவம் குறித்துப் பேசினார். 

இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார். நாடாளுமன்றம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தில்லி காவல் ஆணையர் மற்றும் உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.