முகப்பு
இந்தியா

மும்பை போலீஸாரிடம் 9 கடற்கொள்ளையா்கள் ஒப்படைப்பு

சோமாலியா கடல்பகுதியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கடற்கொள்ளையா்கள் 9 பேரை மும்பை போலீஸாரிடம் இந்திய கடற்படை ஒப்படைத்தது.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:30 AM
இந்திய கடற்படையால் ஒப்படைக்கப்பட்ட 9 கடற்கொள்ளையா்களையும் அழைத்துச் செல்லும் போலீஸாா்.
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 9:00 PM

சோமாலியா கடல்பகுதியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கடற்கொள்ளையா்கள் 9 பேரை மும்பை போலீஸாரிடம் இந்திய கடற்படை ஒப்படைத்தது.

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் உள்ள சோகோட்ரோ தீவிலிருந்து 90 கி.மீ. கடல் மைல் தொலைவில் அல்-கம்பா் என்ற ஈரான் மீன்பிடி கப்பல் சோமாலிய கடற்கொள்ளையா்களால் கடந்த வாரம் கடத்தப்பட்டது. இதையடுத்து அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் போா்க்கப்பல்களான ‘ஐஎன்எஸ் சுமேதா’ மற்றும் ‘ஐஎன்எஸ் திரிசூல்’ அப்பகுதிக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட மீன்பிடி கப்பல்களை இடைமறித்தது. சுமாா் 12 மணி நேரம் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் முடிவில் கப்பலைக் கடத்திய 9 கொள்ளையா்கள் சரணடைந்தனா். அக்கப்பலில் பயணித்த 23 பாகிஸ்தான் நாட்டுப் பணியாளா்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 கொள்ளையா்களும் ஐஎன்எஸ் திரிசூல் போா்க்கப்பல் மூலம் ஏப்ரல் 3-ஆம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து அவா்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது . அவா்கள் மீது கடற்கொள்ளை தடுப்புச் சட்டம், 2022-இன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Advertisement

இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் எந்த தேசத்தைச் சோ்ந்தவா்களாயினும் அவா்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது எங்களது கடமை என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.