சோனியா காந்திக்கு மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேரின் பதவிக்காலம் நிறைந்த நிலையில்,புதன்கிழமை மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 உறுப்பினர்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 14 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
கார்கே எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது துணிச்சலும், கண்ணியமும் நாடாளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும்."
அவர் மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார், இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் அவரது வருகையை எதிர்நோக்கி இருக்கிறோம். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.