திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களை விரைவில் வெளியில் சந்திப்பேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அதிகாரத் திமிர் கொண்டிருந்தனர், அவர்கள் மக்களைப் பொய் வழக்குகளில் சிறைக்கு அனுப்பினார்கள். மேலும் பல ஆண்டுகள் சிறையிலிருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா தனக்கு உத்வேகம் அளித்தனர்.
கிழக்கு தில்லியில் உள்ள தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கல்விப் புரட்சி ஜிந்தாபாத். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்று கேஜரிவால் அரசில் கல்வி அமைச்சராக பணியாற்றிய சிசோடியா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறையில் இருக்கும்போது தனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் தான் தனது பலம் என்றும் அவர் கூறினார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம் இருந்தபோதிலும் சுதந்திரக் கனவு நனவாகியது. அதேபோல், ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாள் நல்ல கல்வியைப் பெறுவார்கள். வளர்ந்த நாட்டிற்கு நல்ல கல்வி அவசியம் என்று அவர் கூறினார்.
சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை தில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.