கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை துறை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய வானிலை மையம் கேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. கேரளாவின் கடலோர பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை என்பது 24 மணி நேரத்தில் 64.5 மிமி முதல் 115.5 மிமி மழைப்பொழிவைக் குறிக்கும்.
இந்திய வானிலை ஆய்வு மையம், அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூட்ம் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏப்ரல் 12 முதல் 16 வரை திரிசூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்கள் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் கண்ணூரில் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.