முகப்பு
இந்தியா

மழையால் மலையில் தஞ்சமடைந்த மக்கள்!

ஹிமாசலில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழையில் 8 பேர் பலி

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 4:22 AM
சமேஜ் காட் பகுதியில் வெள்ளம்
பகிர்:

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வருகிற கனமழையால் 8 பலியான நிலையில், 45 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மேக வெடிப்பால் குல்லு, மண்டி மற்றும் சிம்லா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, ஊருக்குள் இருக்கும் மக்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் வருவதால், மலைகளின்மேல் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுவரையில், அதீத மழையின் காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர்; மற்றும் 45 பேர் காணாமல் போயுள்ளனர். அதுமட்டுமின்றி, 103 வீடுகள், 6 மோட்டார், 32 நடைபாதைப் பாலங்கள், கடைகள், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

மழையால் ஏற்பட்ட திடீர் பள்ளம்

இதனைத் தொடர்ந்து, குல்லு மாவட்டத் துணை ஆணையர் தோருல் எஸ் ரவீஷ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். தோருல் எஸ் ரவீஷ் கூறியதாவது, ``பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் சேதமடைந்துள்ளதால், பாதுகாப்பான இடங்களில் பள்ளிகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சிம்லாவிலும் மழையால் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளதாக சிம்லா மாவட்ட ஆணையர் தெரிவித்தார். காணாமல் போனவர்களை 100 கி.மீ. பரப்பளவில் ட்ரோன்கள் மூலம் தேடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நிவாரண முகாம்களுக்கும் சென்று ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 50,000 உடனடி உதவியாகவும், மூன்று மாதங்களுக்கு ரூ. 5,000 வாடகை வீட்டிற்காகவும் மற்றும் அரசு இலவச ரேஷன், சமையல் எரிவாயு மற்றும் அடுப்புகளை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.