வயநாடு: உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடக்கம்!
நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடக்கம்: கேரள அரசு
வயநாட்டில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும், இன்று(ஆக. 4) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுவரை 49 டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்டுள்ள உடல்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல மொத்தம் 149 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதுவரை 221 உடல்கள், 166 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 380 உடற்கூராய்வுகள்(உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் உள்பட) மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரல்மலையில் மண்ணில் புதைந்துள்ள உடல்களை கண்டுபிடிக்க டிரோன்கள் மூலம் தேடுதல் பணி 6-வது நாளாக தொடருகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.