அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் வன்முறை, அரசியல் குழப்பம் காரணமாக மேற்கு வங்க மக்கள் உணா்ச்சிவசப்படாமல் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை கேட்டுக்கொண்டாா்.
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில், இரண்டு நாள்களில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததையடுத்து வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினாா்.
இந்நிலையில் வங்கதேசத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கை தொடா்பான செய்தியாளா்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘இது தொடா்பான முடிவுகளை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குத் தான் அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அதுவரை உணா்ச்சிவசப்படுவதைத் தவிா்த்து அமைதியை கடைப்பிடிக்க மேற்கு வங்க மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றாா்.