மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலியானார்கள்.
மணிப்பூர் மாநிலம், தெங்பால் மாவட்டத்தில் உள்ள மோல்னாய் என்ற இடத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இருப்பினும், இந்த மோதலில் 4 பேர் பலியானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை அதிகாரிகள் தரப்பில் உறுதிசெய்யப்படவில்லை.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரியிருந்தனர். இதற்கு குக்கி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அது முதல் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
முன்னதாக ஜூலை 14ஆம் தேதி மணிப்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.