வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து வருகிறார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன 153 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கேரளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 11 நாள்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு வந்துள்ளார்.
கேரளத்தின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். பின்னர், நிலச்சரிவால் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
வயநாடு நிலச்சரிவைத் தேசியப் பேரிடராக அறிவிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரண நிதி ஒப்புதல் அளிப்பது குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று கேரள அரசு எதிர்பார்ப்பில் உள்ளது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.