முகப்பு
இந்தியா

பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயற்சி: ராகுல் காந்தி

மத்திய அரசின் லேட்டரல் என்ட்ரி பணி நியமனத்துக்கு எதிர்ப்பு..

Updated On : 19 ஆகஸ்ட், 2024 at 8:31 AM
ராகுல் காந்தி
பகிர்:

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை அரசு அலுவலர்கள் அல்லாத துறைச் சார்ந்த வல்லுநர்களை கொண்டு நிரப்புவதற்கு (லேட்டரல் என்ட்ரி) விண்ணப்பங்கள் வரவேற்பதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,

“லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல்.

பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

கடந்த 2018 முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →