யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதிய கடிதத்தில் தேதி இல்லாததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை மத்திய அரசுப் பணியில் நேரடியாக நியமிக்கப்படும் நடைமுறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேரடி நியமனத்துக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு யுபிஎஸ்சி தலைவருக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதிய கடிதத்தில் தேதியே குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை விமர்சித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிரதமரின் கீழ் பணிபுரியும் ஒரு மத்திய அமைச்சர், அரசியலமைப்பு அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லை, இது மோசமான ஆட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில், 2014ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த நேரடி பணி நியமனங்கள், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டு வெளிப்படைத்தன்மையோடு நடத்த முற்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு, எவ்வித இட ஒதுக்கீட்டு முறைகளையும் பின்பற்றாமல், நேரடி நியமனங்கள் மூலம் மிக முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள், குறிப்பாக உதைய் அமைப்பின் தலைவர் பொறுப்பைக் கூட நியமித்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.