உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரேபரேலி மாவட்டம் பஹவல்பூர் சிஸ்னி கிராமத்தில் கடந்த 11-ஆம் தேதி உள்ளூர் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், அர்ஜூன் பசி என்ற 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தலித் இளைஞரின் வீட்டுக்கு இன்று பகல் 1 மணியளவில் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:
“தலித் இளைஞரின் கொலைக்காக இங்குள்ள மக்கள் அனைவரும் நீதி கேட்கிறார்கள். அந்த இளைஞரின் குடும்பம் அச்சுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் மீது காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. உடந்தையாக இருந்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் அனைத்து சமூகத்தினரும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீதி கிடைக்கும் வரை பின்வாங்க மாட்டோம்.
நான் இளைஞரின் குடும்பத்தினருடன் உரையாடினேன். அவர்களது இளைய மகன் முடித் திருத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். ஒரு இளைஞர் பலமுறை முடிவெட்டியும் பணம் கொடுக்காததை கேட்டதால் மற்றொரு மகன் கொல்லப்பட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தரும் வரை நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. தலித் குடும்பம் என்பதால் இதுபோன்று நடக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, ஃபர்சத்கஞ்ச் விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், லக்னெளவுக்கு காரில் சென்று அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.