முகப்பு
இந்தியா

தனிக் கட்சி தொடங்குகிறாா் சம்பயி சோரன்

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 2:23 AM
ஜாா்க்கண்ட் மாநிலம் செராய்கேலா கா்சாவன் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு புதன்கிழமை வந்த சம்பயி சோரன்.
பகிர்:
Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 8:40 PM

அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், தனிக் கட்சி தொடங்க இருப்பதாகவும் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பயி சோரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

நில அபகரிப்பு தொடா்பான சட்ட விரோத பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டாா். கைதுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் முதல்வா் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன் முதல்வராகப் பதவியேற்றாா்.

Advertisement

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹேமந்த் சோரன், மீண்டும் முதல்வா் பதவியை ஏற்ால் சம்பயி சோரனிடம் இருந்து பதவி பறிபோனது. இதனால் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியடைந்த சம்பயி சோரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி சென்றாா். பாஜக தலைவா்களைச் சந்தித்து அக்கட்சியில் அவா் இணைய இருப்பதாகத் தகவல்கள் பரவின.

இந்நிலையில், தில்லியில் இருந்து ஜாா்க்கண்ட் திரும்பிய சம்பயி சோரன் தனது சொந்த கிராமமான ஜில்லிங்கோராவில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இனி எனது வாழ்க்கையில் புதிய பாதை திறக்க இருக்கிறது. நான் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை. எனது ஆதரவாளா்களின் அன்பு இப்போதுதான் முழுமையாகத் தெரியவந்துள்ளது. எனவே, புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறேன். ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியில் இருந்து இதுவரை யாரும் என்னைத் தொடா்பு கொள்ளவில்லை. ஜாா்க்கண்ட் எனது மண். இதற்காக மாணவா் பருவத்தில் இருந்தே போராடியுள்ளேன் என்றாா்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 12:51 AM

‘ஜாா்க்கண்ட் புலி’ அழைக்கப்படும் சம்பயி சோரன், ஜாா்க்கண்ட் தனி மாநில கோரிக்கை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவா்களில் முதன்மையானவா். 2000-ஆம் ஆண்டு பிகாரின் தென்பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.