கொல்கத்தா மருத்துவர் வழக்கு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் சிபிஐ
கொல்கத்தா மருத்துவர் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ இன்று தாக்கல் செய்யும்
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவிருக்கிறது.
இதற்கிடையே, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டிருந்த சுஹ்ரிதா பால், அப்பதவியிலிருந்து நீக்கி, மேற்கு வங்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், மனஸ் பண்டோபாத்யாய் என்பவரை புதிய முதல்வராக நியமித்துள்ளது. மேலும், இதே மருத்துவமனையில், சம்பவம் நடந்த போது முதல்வராக இருந்த சந்தீப் கோஷ், பதவி நீக்கம் செய்யப்பட்டு, கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டிருந்த உத்தரவையும் ரத்து செய்திருக்கிறது.
பெண் மருத்துவர் வன்கொடுமை, கொலைச் சம்பவத்தை தவறாக வழிநடத்தியக் குற்றத்துக்காக, சந்தீப் கோஷ் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளார்.
மேற்கு வங்கத்தில், மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், சமூக ஊடக நிறுவனங்களுக்கு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருக்கும், பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம், விடியோக்களை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.