மகளின் செல்ஃபோனை ஆய்வு செய்தால் ஆதாரம் கிடைக்கும்: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்
மகளின் செல்ஃபோனை ஆய்வு செய்தால் முக்கிய ஆதாரம் கிடைக்கும் என்று கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட தங்கள் மகளின் செல்ஃபோனை ஆய்வு செய்தால், முக்கிய ஆதாரம் கிடைக்கும் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அவரது செல்போனின் பேட்டர்ன் தங்களுக்குத் தெரியவில்லை என்பதால், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு அதனை திறந்து ஆய்வு செய்தால், அதில் பல ஆதாரங்கள் கிடைககும் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது மகளின் மரணத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளியை காப்பாற்றுவதற்காக அனைத்து ஆதாரங்களும் மறைக்கப்பட்டுள்ளன. உண்மையான குற்றவாளி வெளியே சுதந்திரமாக இருக்கிறார், செல்போனை ஆய்வு செய்தால் உண்மையான குற்றவாளி யார் என்பதற்கான ஆதாரம் தெரிய வரும் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்கள் பெற்றோர்.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்காக, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ், 8வது நாளாக இன்றும் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகியிருக்கிறார். சந்தீப் கோஷ் மற்றும் சம்பவத்தின் போது மருத்துவமனையில் இருந்த நான்கு இளநிலை மருத்துவர்களிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் உண்மைதானா என்பதை அறிய இந்த சோதனையை நடத்துவதற்கு சிபிஐ அனுமதி பெற்றுள்ளது.
ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது முக்கிய சாட்சியாக இருக்கும் நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் அந்த நபரின் ஒப்புதல் தேவை. இந்த கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களாக சந்தேகிக்கப்படும் சந்தீப் கோஷ், 4 மருத்துவா்களிடம் இச்சோதனையை நடத்த அனுமதி கோரி, நீதிமன்றத்தில் அவா்களை சிபிஐ ஆஜா்படுத்தியது. இதையடுத்து, சிபிஐ-யின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த வழக்கில் கைதாகியிருக்கும் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராயின் சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இவருக்காக வாதார அரசு சார்பில் கவிதா சர்கார் என்ற வழக்குரைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குரைஞர்கள் யாரும் இந்த வழக்கில் ஆஜராக முன் வராததால், மூத்த வழக்குரைஞர் கவிதா ஆஜராகிறார். இவரது 25 ஆண்டு கால பணி அனுபவத்தில், அவருக்கு சவாலாக இந்த வழக்கு அமையலாம் என்று கருதப்படுகிறது.