முகப்பு
இந்தியா

தில்லி: துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ஆம் வகுப்பு மாணவன்

தில்லியில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ஆம் வகுப்பு மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 11:26 AM
கோப்புப்படம்.
பகிர்:

தில்லியில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ஆம் வகுப்பு மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தீபக் விஹார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து சனிக்கிழமை நஜப்கார் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. உடனே பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் பையில் அவனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கி இருந்ததைக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியின் உரிமத்தை சரிபார்த்ததில் அது காலாவதியாகாமல் இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த கைத்துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் இல்லை என்று அதிகாரி கூறினார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட சிறுவனின் தாயார், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி தனது கணவருடையது என்று தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் இறந்துவிட்டதாகவும், அதை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வெளியில் வைத்திருந்ததாகவும் சிறுவனின் தாய் தெரிவித்திருக்கிறார். மேலும் சிறுவனும், பொம்மை துப்பாக்கி என நினைத்து தான் பள்ளிக்கு எடுத்து வந்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளான்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் அன்றைய நாளே கைத்துப்பாக்கியை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். 6 ஆம் வகுப்பு மாணவன் பையில் நிஜ துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.