முகப்பு
இந்தியா

கேரள திரைத் துறை பாலியல் விவகாரம்: 7 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு!

மலையாள திரைத் துறை பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க 7 காவலர்கள் கொண்ட சிறப்புக் குழு.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 3:23 PM
முதல்வர் பினராயி விஜயன் - கோப்புப் படம்
பகிர்:

மலையாள திரைத் துறை பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 7 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இக்குழுவானது கேரள திரைத் துறை பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

கேரள காவல் துறை தலைவர் ஸ்ப்ரஜன் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், 4 மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் எச்.வெங்கடேசன் குழுவின் செயல்பாட்டைக் கண்காணிப்பார் எனவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குழுவில் இடம் பெற்றவர்கள்

காவல் துறை தலைவர் ஸ்ப்ரஜன் குமார், காவல்துறைத் துணைத்தலைவர் (டிஐஜி) அஜிதா பேகம், குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் மெரின் ஜோசப், கடலோர காவல் துறை துணைத் தலைவர் பூங்குழலி, கேரள போலீஸ் அகாதெமி உதவி இயக்குநர் ஐஸ்வர்யா டோங்ரே, காவல் துறை துணைத் தலைவர் அஜித் வி, குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மதுசூதனன் ஆகியோர் சிறப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையிலான பேர் கொண்ட ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

மலையாள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதில், கேரள திரைப்படத் துறையானது ஒருசில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், புதிதாக வரும் நடிகைகள் வாய்ப்புக்காக எதற்கும் சரணடைவார்கள் என்ற எண்ணம் துறையில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்துள்ளார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித்தும் விலகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments