அசாமில் வசிக்கும் 27 லட்சத்தும் அதிகமான மக்கள் தங்களின் ஆதார் அட்டையை இழந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கும் போது, 27 லட்சம் பேரின் பயோமெட்ரிக் முடக்கப்பட்டதாகவும், அதன் பின்னர், அவர்களால் மீண்டும் ஆதார் அட்டையை பெற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு சுஷ்மிதா தேவ் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
“ஆதார் அட்டையை இழந்த 27 லட்சம் மக்கள் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களையும் இழந்துள்ளனர். மாணவர்களால் கல்வி ஊக்கத்தொகையும் பெற முடியவில்லை.
இந்த விஷயத்தை உச்சநீதிமன்றத்துக்கு நான் எடுத்துச் சென்றபோது, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நிறைவடைந்தவுடன் மக்களுக்கு மீண்டும் ஆதார் வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், இதுவரை தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால், ஆதார் அட்டையை பெற முடியாத சூழலில் மக்கள் உள்ளனர்.
ஆதார் அட்டைக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை என்று மாநில முதல்வர் பொய்களை கூறி வருகிறார். இதன் தொடர்பு குறித்து அவரது அரசு நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 180 நாள்களுக்கு மேல் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டையை பெற முடியும், இதற்கும் குடியுரிமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆதார் விதிகளில் இது கூறப்பட்டுள்ள போதிலும், பயோமெட்ரிக்கை அரசு முடக்கியுள்ளது. இதனால், அதிகளவிலான மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பயோமெட்ரிக் முடக்கப்பட்ட 9.3 லட்சம் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனை வரவேற்ற சுஷ்மிதா, மீதமுள்ள 18 லட்சம் மக்களுக்கும் விரைவில் ஆதார் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.