உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை
உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.
நமது நிருபர்
உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.
இந்திய பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் யுஜிசி பரிந்துரைப்படி ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா என்றும் அத்தகைய சேர்க்கை எந்தெந்த கல்வி நிறுவனங்களில் உள்ளன என்றும் மாநிலங்களவை மதிமுக பொதுச்செயலரும் மூத்த உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்:
Advertisement
பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மற்றும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர்களை சேர்க்க உயர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் கொள்கைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்ப்பது கல்வி நிறுவனங்களின் விருப்பமாகும்.
ஆண்டுக்கு இரு முறை சேர்க்கையை கையாளும் கல்வி நிறுவனங்களின் தயார்நிலையைப் பொருத்து. செமஸ்டர் தேர்வுகளுக்கான திட்டம் உள்பட, ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்க்கும் கொள்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு திட்டத்தை உயர் கல்வி நிறுவனங்கள் கவனமாகத் தயாரிக்க வேண்டும்.
இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்ற அறிவிக்கையை 2024, ஜூன் 9-ஆம் தேதி யுஜிசி வெளியிட்டுள்ளது. மேலும், யுஜிசியிடம் உள்ள தகவல்களின்படி, கேரளம் மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், நாகாலாந்து பல்கலைக்கழகம் ஆகியவை ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை வழங்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார்.