வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?
மாணவர்களிடையே வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு, உயர்கல்வித் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள இளநிலை கலை, அறிவியல் பாடத்திட்டங்கள் குறித்து தெரிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள இளங்கலைப் படிப்புகளை மூட, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் (DCE) திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரிகள், மண்டல இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சில இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைவதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது பற்றி ஒரு கல்லூரி முதல்வர் கூறுகையில், தற்போது, தனியார் கல்லூரிகளில், மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளநிலைப் படிப்புகளில் புதுமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடர்ந்து ஒன்றுபோலவே படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் அரசு கல்லூரிகளில் வணிகம் சார்ந்த படிப்புகளையே படிக்கிறார்கள். எனவே நவீன, புதுமையான படிப்புகளில் சேர விரும்புவோர் தனியார் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தற்போது ஒருசில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல், வரலாறு மற்றும் தமிழ் போன்ற பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர் பணி வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பெரிய அளவில் பணி வாய்ப்பு கிடைக்காது என்பதால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார்.
ஒருபக்கம், மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் பாடத்திட்டங்களை மூடிவிட்டு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் இருக்கும் புதுமையான நவீன படிப்புகளை அறிமுகப்படுத்தகவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஒரு சில கிராமப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும்போது மிகக் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.