டிஜிட்டல் கைது மோசடி குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக 59,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப் கணக்குகள் மட்டுமல்லாது, பிரபல சமூக வலைதளமான ஸ்கைப்பில் 1,700-க்கும் மேற்பட்ட கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ‘இந்தியன் இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம்(ஐ4சி), மோசடி குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட 59,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப், 1,700-க்கும் மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றை முடக்கியுள்ளது.
ஐ4சி-யால் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘குடிமக்கள் நிதி இணையவழி மோசடிப் புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு’, பணமோசடிகளைக் குறித்து பாதிக்கப்பட்டோர் உடனடியாக புகாரளிக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் மோசடிக்குள்ளான வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் பறிக்கப்படும்முன் அதை தடுக்க இயலும்.
அந்த வகையில், இதுவரை, 9.94 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையவழி மோசடிப் புகார்களில் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ரூ. 3,431 கோடிக்கும் அதிக தொகை பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நிகழாண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 6.69 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளும் 1.32 லட்சம் ஐஎம்இஐ-முகவரிகளும் முடக்கப்பட்டுள்ளன
டிஜிட்டல் மோசடி உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்களை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பலப்படுத்த, மத்திய அரசும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஓர் அமைப்பை வடிவமைத்துள்ளன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள கைப்பேசி எண்கள் போல் திரையில் காண்பிக்கப்பட்டு உலகின் ஏதோவொரு மூலையிருந்து வரும் சர்வதேச மோசடி அழைப்புகளைக் கண்டறிந்து அவற்றை தடுக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.