பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் மின்னணு கண்காணிப்புத் திட்டம்: பிஎஸ்எஃப்
இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்த முடியாத 600 இடைவெளிகளை மின்னணு வழியில் கண்காணிக்கும் திட்டம்
இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்த முடியாத 600 இடைவெளிகளை மின்னணு வழியில் கண்காணிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
பிஎஸ்ஃப்பின் 60-ஆவது தொடக்க நாளையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அந்தப் படையின் தலைவா் தல்ஜீத் சிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு நெடுகிலும் 2,289 கி.மீ. நீளத்துக்கு இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லை உள்ளது. இந்த எல்லை பகுதிகளில் பிஎஸ்எஃப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த எல்லைப் பகுதிகள் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க வேண்டும் என்று பிஎஸ்எஃப் படைகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆறுகள் மற்றும் பிற புவியியல் சவால்கள் போன்ற காரணங்களால் இந்தியா-வங்கதேசம், இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைகளில் 484 கி.மீ. தொலைவுக்கு தடுப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அங்குள்ள 600 இடைவெளிகளை மின்னணு வழியில் கண்காணிக்கும் திட்டத்தை பிஎஸ்எஃப் முன்னெடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது முதல், அந்நாட்டுடன் இந்தியா பகிா்ந்துகொள்ளும் எல்லையில் பிஎஸ்ஃஎப் தொடா்ந்து உஷாா் நிலையில் இருந்து வருகிறது. இந்த எல்லையில் தேவையில்லாத ஆள்நடமாட்டம் அல்லது ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்றாா்.
பிஎஸ்எஃப் புள்ளிவிவரங்களின்படி, நிகழாண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 257-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்), அந்நாட்டுடன் பகிா்ந்து கொள்ளப்படும் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 432 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல நிகழாண்டு இந்திய-வங்கதேச எல்லையில் 172 கிலோ கடத்தல் தங்கம், 178 கிலோ கடத்தல் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.