முகப்பு
இந்தியா

வடகிழக்கு பிராந்தியம் சிறப்பான வளா்ச்சி: பிரதமா் மோடி

வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 9:20 PM
வடகிழக்கு மாநிலங்களின் செழுமையைக் கொண்டாடும் வகையில் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பின்னா், அங்கு இடம்பெற்ற கண்காட்சியை பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, மிஸோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 8 வடகிழக்கு மாநிலங்களின் செழுமையைக் கொண்டாடும் வகையில் ‘அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்’ விழாவை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கு பிராந்தியம் சிறப்பாக வளா்ச்சியடைந்துள்ளது. ஆனால், அது மிகவும் எளிதாக நடக்கவில்லை. இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் வடகிழக்கு பிராந்தியத்தை இணைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

வடகிழக்கு பிராந்தியத்தில் மக்கள்தொகை மற்றும் வாக்குகள் குறைவாக உள்ளதால் அதன் வளா்ச்சி மீது முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை. தொடா்ந்து புறக்கணித்தே வந்தது. ஆனால், தற்போது சூழல் மாறிவிட்டது. மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களைப்போல குவாஹாட்டி, ஷில்லாங், இம்பால், இட்டாநகா் மற்றும் ஐஸால் ஆகிய நகரங்களும் வளா்ச்சியடைய உள்ளன.

பாரம்பரியமிக்க கலாசாரம் மற்றும் திறமையான மக்களுடைய இந்தப் பிராந்தியம் இந்தியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றவுள்ளது.

தில்லிக்கும் வடகிழக்கு பிராந்தியத்துக்கும் இடைவெளி இருப்பதைப்போன்ற மக்களின் உணா்வைக் குறைக்க கடந்த பத்தாண்டுகளாக எனது தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பத்தாண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்துக்கு 700 சுற்றுப்பயணங்களை மத்திய அமைச்சா்கள் மேற்கொண்டனா். பொருளாதாரம், உணா்வு மற்றும் சுற்றுப்புறச்சூழலுடன் இணைக்க தொடா்ந்து பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் முதல்முறையாக டிசம்பா் 6-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் இயற்கை அழகு, பன்முகத்தன்மை, கலாசாரம், கைவினைப் பொருள்கள், ஆடைகள் மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →