நகர்ப்புறத்தில் 9.38 லட்சம் மக்களுக்கு வீடு இல்லை: மத்திய அரசு
தில்லியில் மட்டும் 46,724 குடிமக்கள் வீடின்றி வசித்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் நகர்ப்புறத்தில் உள்ளவர்களில் 9.38 லட்சம் மக்களுக்கு வீடுகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தலைநகரான தில்லியில் மட்டும் 46,724 குடிமக்கள் வீடின்றி வசித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தோஹன் சாஹு,
2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,80,929 மக்கள் வீடின்றி வசித்துவருவதாகக் கூறினார்.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 1,11,373 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,04,967 பேரும் வீடின்றி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய சாஹு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சொந்த வீடுகளின்றி வசித்துவரும் குடிமக்கள் குறித்த தரவுகளும் சேகரிக்கப்படுகிறது. 2011 கணக்கெடுப்பின்படி 9,38,348 மக்கள் வீடின்றி வசித்து வருகின்றனர் எனக் கூறினார்.