பாலஸ்தீனத்தைத் தொடா்ந்து வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கோரி ‘பை’யுடன் வந்த பிரியங்கா
பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கைப்பையுடன் வந்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தைத் தொடா்ந்து,
பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து கைப்பையுடன் வந்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தைத் தொடா்ந்து, வங்கதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு நீதி கோரும் வாசகங்கள் அடங்கிய பைக்களுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பிரியங்காவின் பாலஸ்தீன ‘பை’ க்கு மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் திங்கள்கிழமை அமளி ஏற்பட்டது. ‘நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை யாா் முடிவு செய்வது?’ என எக்ஸ் பக்கத்தில் பிரியங்கா கேள்வி எழுப்பியிருந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆதரவான வாசகங்கள் இடம்பெற்ற கைப்பைகளுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீதான வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் முழக்கமிட்டனா்.
முன்னதாக, மக்களவையில் திங்கள்கிழமை பேசிய பிரியங்கா காந்தி, ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பது குறித்து அந்நாட்டின் இடைக்கால அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான அராஜகங்களுக்கு மத்திய அரசு தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.