தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் உடல் அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்திய அரசு சார்பாக சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதர் நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
சான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு வாரங்களாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.15ஆம் தேதி அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அவரின் உடல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலேயே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் ஹுசைனின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பில் இந்திய தூதர் ஸ்ரீகர் ரெட்டி கலந்து கொண்டார்.
இந்திய இசைக் கலைஞர்கள் சிவமணி உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு இசைக் கருவிகளை வாசித்து இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞரும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான ஜாகிர் ஹுசைனின் உடல் சான் பிரான்சிஸ்கோவுக்கு அருகிலுள்ள மில் பள்ளத்தாக்கு பகுதியில் ஃபெர்ன்வுட் கல்லறையில் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக இந்திய தூதர் ஸ்ரீகர் ரெட்டி கலந்து கொண்டு தேசியக் கொடியை அவரது உடலுக்கு போர்த்தி மரியாதை செலுத்தினார்.
அவரது மனைவி அன்டோனியா மின்னெகோலா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் செய்தியை பகிர்ந்தார்.
இந்த இறுதிச் சடங்கில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சிவமணி உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், புலம்பெயர் இந்தியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.