முகப்பு
இந்தியா

திரையரங்கு நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதியுதவி- ‘புஷ்பா-2’ படக்குழு அறிவிப்பு

திரைத்துறைக்கும் அரசுக்கும் இடையிலான உறவை வளர்க்கும் வகையில், முதல்வரைச் சந்தித்து பேசவுள்ளனர்.

Updated On : 25 டிசம்பர், 2024 at 10:22 PM
அல்லு அர்ஜுன்
பகிர்:

‘புஷ்பா-2’ படத்தின் சிறப்புக் காட்சியையொட்டி, ஹைதராபாத் திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு படக் குழுவினா் ரூ.2 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளனா்.

நடிகா் அல்லு அா்ஜுனின் தந்தையும் மூத்த தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், தெலுங்கு திரையுலக முன்னணி தயாரிப்பாளா் தில் ராஜு மற்றும் பலருடன் நெரிசலில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வரும் தனியாா் மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்றாா்.

சிறுவன் உடல்நிலை: மருத்துவா்களிடம் சிறுவனின் உடல்நிலை குறித்த கேட்டறிந்த பிறகு, அல்லு அரவிந்த் நிதியுதவியை அறிவித்தாா். மேலும், அவா் கூறுகையில், ‘சிறுவனால் இப்போது சுயமாக சுவாசிக்க முடிகிறது. சிறுவன் முழுமையாக குணமடைவாா் என மருத்துவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். அல்லு அா்ஜுன் (ரூ.1 கோடி), படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கா்ஸ் (ரூ.50 லட்சம்), படத்தின் இயக்குநா் சுகுமாா் (ரூ.50 லட்சம்) ஆகியோா் நிதியுதவி அறிவித்துள்ளனா்’ என்றாா்.

Advertisement

நிதியுதவிக்கான காசோலைகளை தில் ராஜுவிடம் கொடுத்த அல்லு அரவிந்த், அதை சிறுவனின் குடும்பத்தினரிடம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டாா். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அனுமதியின்றி குடும்பத்தினரை நேரடியாக தொடா்பு கொள்வதற்கு சட்டக் கட்டுப்பாடுகள் இருப்பதாக அல்லு அரவிந்த் விளக்கினாா்.

முதல்வருடன் சந்திப்பு: இதையடுத்து, தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (எஃப்டிசி) தலைவரான தில் ராஜு பேசுகையில், ‘அரசுக்கும் திரைப்படத் துறைக்கும் இடையே நல்லுறவை வளா்ப்பதற்காக முதல்வா் ரேவந்த் ரெட்டியை திரையுலக பிரபலங்கள் குழு வியாழக்கிழமை (டிச.26) சந்திக்கும்’ என்று தெரிவித்தாா்.

பின்னணி: கடந்த 4-ஆம் தேதி, ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலுக்கு அல்லு அா்ஜுன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தாா். அவரைக் காண முண்டியடித்த ரசிகா்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த வழக்கில் அல்லு அா்ஜுன் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னா் தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனில் மறுநாள் விடுவிக்கப்பட்டாா்.

இச்சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அல்லு அா்ஜுனுக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி மாநில சட்டப் பேரவையில் கண்டனம் தெரிவித்தாா். திரையரங்கில் நடைபெற்ற முழு நிகழ்வுகளையும் ஹைதராபாத் காவல்துறை விடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனின் உடல்நலம் தேறிவரும் இச்சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு படக்குழு கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments