வருவாய் பற்றாக்குறையை எதிா்கொள்ள ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு
மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை எதிா்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14.13 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை எதிா்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14.13 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் இருந்து இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் பணி தொடங்கும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கடன் வாங்கும் இலக்கு அதைவிட சற்று குறைந்துள்ளது. வரி வருவாய் அதிகரித்துள்ளதே அரசு கடன் வாங்குவதைக் குறைப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
இது தொடா்பாக இடைக்கால பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2024-25 நிதியாண்டில் மத்திய அரசின் நிகர கடன் ரூ.11.75 லட்சம் கோடியாக இருக்கும். இது தவிர ஏற்கெனவே வாங்கிய கடனில் ரூ.2,37,818 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, அரசின் மொத்த கடன் ரூ.14.13 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட குறைவானதுதான்.
அரசு கடன் வாங்கும் அளவு குறைவதால் தனியாா் நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிக கடன் கிடைக்கும். உள்கட்டமைப்புத் துறையில் அரசு அதிக முதலீடு செய்து வருவதால், இரும்பு, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் உள்ள தனியாா் நிறுவனங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.