மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிதிப் பத்திர விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. மொத்த தேர்தல் நிதிப் பத்திர நன்கொடையில் பாஜக மட்டும் 95 சதவிகிதம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் நிதிப் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடும் பாஜகவை கலங்கப்படுத்தும் பெரிய ஊழலாக தேர்தல் பத்திர திட்டம் மாறியதால், மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பாஜகவின் நலனுக்காக மோடி பதவி விலக வேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக, அயோத்தி சிலை பிரதிஷ்டை விழாவின்போது, பிரதமர் மோடி தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரை பின்பற்றவில்லை என்றும், குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.