மத்தியப் பிரதேசம்: ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிபொருள் கண்டெடுப்பு
பிந்த் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பதற்றம்: வெடிபொருள் சிக்கியது, விசாரணை தீவிரம்
மத்தியப் பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருளாள் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், பிந்த் மாவட்டத்தில் ஹனுமான் பஜாரியா என்ற குடியிருப்பு காலனியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் உள்ளது. இங்கு வெடிபொருள் இருப்பதை அலுவலக உதவியாளர் ராம் மோகன் சனிக்கிழமை இரவு கண்டறிந்தார்.
உடனே இதுகுறித்து உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement
தகவல் அறிந்ததும் பிந்த் காவல் கண்காணிப்பாளர் ஆஷித் யாதவ் தலைமையில் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். பின்னர் மொரீனாவில் இருந்து வெடிகுண்டு செயலிழப்புக் குழு வரவழைக்கப்பட்டு அந்த வெடிபொருள் அப்புறப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அது செயலிழக்கச் செய்யப்பட்டது. சங்க அலுவலக வளாகத்தில் கொடி நிறுவப்பட்ட இடத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றதால் அலுவலகம் காலியாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.