மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிமாசல் பிரதேசம் அமைச்சர் பதவியை விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா செய்துள்ளார்.
ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் வாக்களித்ததால் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.
இது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஹிமாசல் காங்கிரஸின் முக்கிய தலைவர் விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விக்ரமாதித்ய சிங் பேசியது:
“தற்போதைய அரசியல் சூழலில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியல்ல, அதனால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்.
கள நிலவரம் குறித்து கட்சியின் மேலிடத்துக்கு எடுத்துரைத்துள்ளேன். கட்சியின் மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், கட்சி மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநில அரசுக்கு எதிராக ஆளுநரை சந்தித்து பாஜக எம்எல்ஏக்கள் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.