நாயைக் காப்பாற்ற அணையில் குதித்த பிடெக் பட்டதாரி பலி; நீந்தி கரையேறியது நாய்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், நண்பனின் நாயைக் காப்பாற்ற அணைக்குள் குதித்த என்ஐடியில் பிடெக் பட்டதாரி பலியான நிலையில், நாய் நீந்தி கரையேறியது.
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில், நண்பனின் நாயைக் காப்பாற்ற அணைக்குள் குதித்த என்ஐடியில் பிடெக் பட்டதாரி பலியான நிலையில், நாய் நீந்தி கரையேறியது.
சரள் நிகாம் என்ற 23 வயது இளைஞர், யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். இவர் போபால் என்ஐடியில் பிடெக் பட்டம் பெற்றவர். அவரது பெற்றோருக்கு ஒரே மகனாவார்.
முதற்கட்ட விசாரணையில், தனது பெண் தோழிகளுடன் சரள், வனப்பகுதிக்குள் இருக்கும் கெர்வா அணைக்குச் சென்றுள்ளார். அப்போது அணைப் பகுதியை அனைவரும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, பெண் தோழி ஒருவரின் வளர்ப்பு நாய் அணைக்குள் விழுந்துவிட்டது.
அதனைக் காப்பாற்ற, அனைவரும் முயற்சித்துள்ளனர். அப்போது ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு அணைக்குள் இறங்கியபோது, சரள் கைப்பிடி நழுவி அணைக்குள் விழுந்தார்.
அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண் போக, ஒரு சில மணி நேரத்துக்குப் பின் அவரது உடல் கரையொதுங்கியது.
தனியார் பொறியியல் கல்லூரியின் தாளாளராக இருந்து ஓய்வு பெற்றவர், சரளின் தந்தை. சரளின் மரணச் செய்தி கேட்டு பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.