முகப்பு
இந்தியா

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங்கிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு!

பாதல் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரி சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அவதூறு வழக்கு

Updated On : 11 ஜனவரி 2024, 10:11 pm IST
பகவந்த் மான், சுக்பீர் சிங் பாதல் (கோப்புப்படம்)
பகிர்:

பாதல் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரி சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சுக்பீர் சிங் பாதல் தனது வழக்கறிஞர் மூலம் முத்சரில் உள்ள குடிமையியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றக் கட்டணமாக ரூ.2.29 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல்வர் பகவந்த் மான், பஞ்சாபின் விலைமதிப்பற்ற தண்ணீரை பாதலும், அவரது குடும்பத்தினரும் ஹரியாணாவின் பாலாசார் கிராமத்தில் உள்ள அவர்களது விவசாய நிலத்திற்கு கால்வாய் அமைத்து எடுத்துச் சென்றதாக பொய் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் உண்மைகள் தெரிந்திருந்தும் முதல்வர் பகவந்த் மான் சிங் பொய் கூறியதாகவும், தான் வகிக்கும் பதவி காரணமாக அது பாதல் குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே வேண்டுமென்றே அவ்வாறு பேசியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “முதல்வர் பகவந்த் மான் தொடர்ந்து தனக்கு எதிராக தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தன்னையும் தனது குடும்பத்தையும் சீக்கியர்களுக்கு எதிரானவர்கள், பஞ்சாபியர்களுக்கு எதிரானவர்கள் என்று அழைத்து வருகிறார். எங்களை பெரும் ஊழல்வாதிகளாக தொடர்ந்து அவர் சித்தரித்து வருகிறார்.

இவை அனைத்தும் முதலமைச்சர் அவரது அரசியல் கூட்டாளிகளுடன் சேர்ந்து முன்னரே திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாக செய்யப்பட்டுள்ளன.” என்று சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் நவம்பர் 17 அன்று முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்புக் கேட்குமாறு கூறி போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நஷ்ட ஈடாக கோரியுள்ள ரூ.1 கோடி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.